ஹம்பி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை, ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது கங்காவதியில் உள்ள மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலா பயணி, சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஒடிசா சுற்றுலா பயணி பிபாஷ் குமாரை மூன்று இளைஞர்கள் தாக்கி, சனாப்பூர் கால்வாயில் தள்ளிவிட்டனர். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கொப்பல் மாவட்ட போலீஸார் கங்காவதியை சேர்ந்த சாய் மல்லு (22), சேத்தன் சாய் (21), சரவண பசவா (27) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) கீழ் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். அதை ஆதாரங்கள், தடயங்கள் உறுதி செய்தன.
இந்த நிலையில் பிஎன்எஸ் சட்டத்தின் 103(1) சட்டப்பிரிவின் கீழ் கொலை குற்றத்துக்காக மூவருக்கும் மரண தண்டனை விதித்தது மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றம். இந்த தீர்ப்பை நீதிபதி சதானந் நாகப்பா நாயக் பிறப்பித்தார். மேலும், இது மாதிரியான கொடூர குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்குவது சட்ட ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு அவசியம் என தனது தீர்ப்பில் அவர் தெரிவித்தார்.
