

நிகோபார்: மத்திய அரசின் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான கிரேட் நிகோபார் திட்டமானது சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடி சமூகங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்று ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.81,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இத்திட்டம் 166 சதுர கிலோ மீட்டரில் (இதில் 130 சதுர கி.மீ. வனப் பகுதியும் அடக்கம்) செயல்படுத்தப்பட உள்ளது. சரக்கு பெட்டக மாற்று முனையம், ஒருங்கிணைந்த நகரம், ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டிற்கான விமான நிலையம், 450எம்விஏ எரிவாயு மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
நிகோபார் தீவில் இருந்தபடி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில், “ கிரேட் நிகோபார் திட்டம் நமது வாழ்நாளில் இயற்கை மற்றும் பழங்குடி பாரம்பரியத்துக்கு எதிரான மிகப் பெரிய மோசடிகளில் ஒன்று மற்றும் மிகக் கொடிய குற்றங்களில் ஒன்று. மத்திய அரசின் இந்த திட்டம் வளர்ச்சி என்ற மொழியில் கொண்டுவரப்படும் அழிவைத் தவிர வேறொன்றுமில்லை.
அரசாங்கம் இங்கு செய்வதை ஒரு ‘திட்டம்’ என்று அழைக்கிறது. நான் கண்ட வரையில் இது ஒரு திட்டம் அல்ல. நான் காண்பது கோடரியால் வெட்டப்படக் குறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மரங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் 160 சதுர கிலோமீட்டர் மழைக்காடு மற்றும் தங்கள் வீடுகள் பறிக்கப்பட்ட நிலையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் தான்.
தலைமுறை தலைமுறையாகப் பேணிப் பாதுகாக்கப்பட்ட காடுகளும், அந்தத் தீவில் வாழும் அழகான மக்களும் தங்களுக்குச் சட்டப்படி உரிமையானதை இழந்து வருகின்றனர். இந்த திட்டத்தால் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்களையும் விடவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இடம்பெயர்வு அபாயங்களின் அளவு மிக அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த திட்டம் தவறாக திட்டமிடப்பட்டது என்று விமர்சித்திருந்தது. மேலும், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் வலியுறுத்தியிருந்தார்.