“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: “உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கக் கூடாது” என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஜூலை 18) 21-வது நாளை எட்டியுள்ளது. 

இந்நிலையில், டெல்லி காவல்துறையினரால் வாங்சுக் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவருடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அண்ணா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை உலுக்கிய தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நினைவு கூர்ந்து அண்ணா ஹசாரே பேசியுள்ளார். 

இது குறித்து அவர் பேசுகையில், "மத்திய அரசு அவரது பொறுமையைச் சோதிக்கக் கூடாது. அவரது கோரிக்கைகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று எதுவாக இருந்தாலும் அரசு நேரடியாகக் கூறட்டும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிப்பது தொடர்பான டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், வாங்சுக் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்று சிஜேபி அமைப்பைச் சேர்ந்த அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், போராட்டம் நடந்த இடத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், சிவிலியன் உடையில் வந்த காவல்துறையினர் தங்களை மருத்துவக் குழுவினர் என்று பொய் சொல்லி வாங்சுக்கை தடுத்து வைத்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிஜேபி-யின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் பேசுகையில், "சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்க மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதை எங்கள் மருத்துவக் குழு தினமும் 2-3 முறை கண்காணித்து வருகிறது, அவரும் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் புரிந்துகொண்டு டெல்லி காவல்துறை அவரைத் தடுத்து வைத்துள்ளது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்
“இதயத்துக்கு நெருக்கமான அங்கீகாரம்” - தேசிய விருது குறித்து தனுஷ் நெகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in