

டெல்லி முதல்வர், மெட்ரோவில் பயணித்த அமைச்சர் கபில் மிஸ்ரா
புதுடெல்லி: எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு மெட்ரோ மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தை டெல்லி அமைச்சர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளை மெட்ரோ ரயில் இணைக்கிறது. இந்த சூழலில் டெல்லி பிரதேச அரசின் அமைச்சர்களான கபில் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணித்து கவனம் ஈர்த்தனர். இதேபோல புதன்கிழமை அன்று டெல்லி பிரதேச போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங், மாநகர பேருந்தில் சட்டசபைக்கு சென்றார். தனது பயணத்தின் போது சக பயணிகளிடம் இருந்து கருத்துகளை கேட்டறிந்தார். இதேபோல டெல்லியின் பாஜக எம்எல்ஏ ஹரிஷ் குரானா, தனது தொகுதியில் மின்சார இருசக்கர வாகனத்தில் மட்டுமே பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேற்காசிய போர் மற்றும் அந்நிய செலாவணியை இதற்கான காரணமாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து டெல்லியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, எரிபொருள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகளை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமைச்சர்கள் பொது போக்குவரத்தில் பயணம் செய்கின்றனர். அரசு தரப்பில் வழங்கப்படும் பிரத்யேக கார்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்.
இந்நிலையில், புதன்கிழமை அன்று டெல்லியில் வசித்து வரும் மக்கள் மெட்ரோ, பேருந்து மற்றும் மின்வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள் வைத்தார். இது வெறுமனே எரிபொருள் சிக்கனம் மட்டுமல்லாது தேசிய நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.