டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கிய முன்னாள் நீதிபதி
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.1 கோடிக்கு மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெலங்கானா போலீஸார் நேற்று கூறுகையில், ”மல்காங்கிரியை சேர்ந்த 69 வயது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவருடன் டிஜிட்டல் மோசடி நபர்கள் ஒரு வாரத்திற்கு முன் தொடர்பு கொண்டுள்ளனர். பெண்கள் கடத்தல் மற்ற பிற குற்றச்செயல்களில் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1 கோடிக்கு மேல் அந்த நீதிபதி பரிமாற்றம் செய்துள்ளார். பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் 3 நாட்களுக்கு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கைகளை நன்கு அறிந்த ஒருவரே ஏமாறும் அளவுக்கு டிஜிட்டல் மோசடியில் தந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. ”பொதுவாக மோசடி நபர்களின் மிரட்டல்களுக்கு மக்கள் பயப்படுகின்றனர். இதுவே இந்த மோசடிகள் தொடர்வதற்கு காரணம்” என்றும் போலீஸார் கூறினர்.
