

மும்பை: கடந்த மே மாதம் மகாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையராக துக்காராம் முண்டே நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவரது உத்தரவின்படி கடந்த ஜூன் மாதம் புனேவில் உள்ள குருநானக் டைரி, ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சுகாதாரமற்ற முறையில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால் இனிப்பகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரவீந்திர குகே, நீதிபதி கவுதம் அன்காட் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஆணையர் துக்காராமின் செயல்பாடுகளை பாராட்டுகிறோம். ஆனால் சில நேரங்களில் நீங்கள் எல்லை மீறி செயல்படுவதாக கருதுகிறோம். புனே நகர் இனிப்பகத்தில் 98 சதவீத தவறுகள் களையப்பட்டு உள்ளன.
அதன் பிறகும் அந்த இனிப்பகத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை. இதற்காக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையைப் பாதிக்கப்பட்ட இனிப்பகத்துக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.