

அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதியின் தலைமைச் செயலகத்தில் இருந்து, மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை மேலதிகாரிகளுடன் காணொலி மூலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: "அரசு சேவைகளை மக்கள் மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயனடையவும், தங்களுடைய பிரச்சினைகளையும், புகார்களையும் உடனுக்குடன் தெரிவிக்கவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆன்லைன் மூலம் மக்கள் அரசு சேவைகளை விரைவில் பெற்றுக்கொள்ளும் வகையில் வழி வகுக்க வேண்டும்.
இதேபோல் மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள அரசு துறைகளுக்கு ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பினாலே அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதற்காகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ‘மனமித்ரா’ எனும் வாட்ஸ் ஆப் சேவை அமலில் உள்ளது. இதனை மக்கள் சரிவர பயன்படுத்தி வருகின்றனர். எழுத, படிக்க தெரியாதவர்கள் கூட தங்களின் பிரச்சினைகளை தெரிவிக்க ‘வாய்ஸ் மெசேஜ்’ திட்டம் அவசியம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.