

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள பார்கி அணையில் 3 நாட்களுக்கு முன்பு படகில் சுற்றுலா சென்றபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம், படகுப் பயணங்களின்போது செய்ய வேண்டிய அடிப்படை விதிகளைக் கூட அந்தப் படகை இயக்கிய ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் தனது குழந்தையை மார்போடு இறுக அணைத்தபடி தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காட்சி கல்நெஞ்சங்களையும் உருக்குவதாக அமைந்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் சீல் கூட பிரிக்கப்படாத உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரைக் காக்க உதவும் லைப்-ஜாக்கெட்டுகளைப் பயணிகளுக்கு படகு ஊழியர்கள் வழங்கவில்லை.
வீடியோவில் சுற்றுலாப் பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிடுவதும், தப்பிக்க முயல்வதும் தெரிகிறது. படகில் தண்ணீர் புகுந்த பிறகு அவசர அவசரமாக கட்டி வைத்திருந்த லைப் ஜாக்கெட்டுகளை அவிழ்த்து பயணிகளுக்கு வழங்குவது பதிவாகி உள்ளது. பயணிகள் பலர் லைப் ஜாக்கெட்டுகள் அணியாமல் அலறுவதும் தெரிகிறது.
சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை: அதிர்ச்சியில் மீளமுடியாத படகோட்டி - விபத்துக்குள்ளான படகை இயக்கிய பைலட் மகேஷ் படேல் கூறியதாவது:
அணை அமைந்துள்ள கமாரியா தீவில் இருந்து படகை எடுக்கும்போது வானிலை இயல்பாகவே இருந்தது. நடுப்பகுதிக்கு படகு சென்றபோது காற்று பலமாக வீச ஆரம்பித்ததும், படகு தள்ளாட ஆரம்பித்தது. காற்று அதிகரித்த நிலையில் படகின் உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்ததும், சுற்றுலா பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
சுற்றுலாப் பயணிகளை காக்கும் நோக்கில் அந்த படகை கரைக்கு திருப்ப முயன்றேன். அப்போது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து மாற்றுப் படகை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன். நடனம் ஆட வேண்டும் என்றும் அதற்கு லைப் ஜாக்கெட் தடையாக இருக்கும் என்றும் கூறி அதை வாங்க மறுத்தனர். நான் 15 ஆண்டுகளாகப் படகோட்டும் தொழிலில் இருந்து வருகிறேன்.
இதுபோன்ற பரிதாபமான விபத்தைச் சந்தித்ததே இல்லை. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. குற்ற உணர்ச்சியால் சாப்பிட முடியவில்லை. தூக்கம் வரவில்லை. நடந்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.