டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “இந்தியாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. நமது சமூகம் மிகவும் சிக்கலானது. ஒரே மாதிரியான மக்கள் வாழும் சமூகங்களில் கருத்துக் கணிப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. நீங்கள் யாரிடம் கருத்துகளை கேட்கிறீர்களோ அவர்கள் உண்மையிலேயே சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று உங்களால் ஒருபோதும் அறிய முடியாது.
தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை மற்றவர்களிடம் கூறத் தயங்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாகக் கருத்துக் கணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். இதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மே 4-ஆம் தேதி முடிவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “கிரணுக்கும் எனக்கும் இடையில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் கேலி செய்துகொண்டிருந்தோம். கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம். யாரும் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று கருத மாட்டார்கள் என்று நாங்கள் கேலி செய்துகொண்டிருந்தோம், அது உண்மைதான்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியையும் யாரும் பெண்களுக்கு எதிரானது என்று கருத மாட்டார்கள். நாங்கள் பெண்களால், வலிமையான பெண்களால் வழிநடத்தப்படுகிறோம். 2013-ல் மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றப்பட்டபோதும், அதைத் தொடர்ந்து அந்த அரசு மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோதும் அதை நாங்கள் வலுவாக ஆதரித்தோம். நாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம்.
தொகுதி மறுவரையறையுடன் அதை இணைப்பதை மட்டுமே நாங்கள் எதிர்த்தோம். அரசு அதை தேவையற்ற அவசரத்தில் திணிப்பதாக நாங்கள் நம்புகிறோம். தொகுதி மறுவரையறையை நிறைவேற்றுவதற்கு மகளிர் இட ஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்துவது நல்லதல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தனியாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமானால், அதற்கு ஆதரவாக நாளையே நாங்கள் வாக்களிக்கத் தயார்” என தெரிவித்தார்.