

கொல்கத்தா: பொது விநியோகத் திட்ட ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தில் 9 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.
மேற்கு வங்கத்தில் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட கோதுமை, பெரிய அளவில் திசை திருப்பப்பட்டதாக, கோஜதங்கா சுங்கத் துறை துணை ஆணையர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், பசீர்ஹட் காவல் நிலையத்தில் கடந்த 2020, அக்டோபர் 23-ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் கொல்கத்தா மண்டல அலுவலகம் இந்த சோதனையை நடத்தியது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொல்கத்தா, பர்த்வான், ஹாப்ரா ஆகிய நகரங்களில் உள்ள 9 இடங்களில் நேற்று அதிகாலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரஞ்சன் சந்திர சாகா மற்றும் பிறருடன் தொடர்புடைய சப்ளையர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொது விநியோகத் திட்ட கோதுமையைத் திசை திருப்ப குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு முறையான வழிமுறையை கையாண்டுள்ளனர். சப்ளையர்கள், உரிமம் பெற்ற விநியோகஸ்தர்கள், டீலர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து, அங்கீகரிக்கப்படாத வழிகள் மூலம் குறைந்த விலையில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு விநியோகச் சங்கிலியில் இருந்து பெரிய அளவிலான கோதுமை திசை திருப்பப்பட்டு, பல இடங்களில் சேகரிக்கப்பட்டது.
அங்கு இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) மற்றும் மாநில அரசு முத்திரைகள் கொண்ட கோணிப் பைகள் அகற்றப்பட்டு, புதிய கோணிப் பைகளில் கோதுமை நிரப்பப்பட்டுள்ளது. பிறகு அந்த கோதுமை சந்தை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையற்ற ஆதாயம் அடைந்துள்ளனர். குற்றச் செயல் மூலம் வருமானம் ஈட்டியுள்ளனர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் உட்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 23-ம் தேதி முடிந்தது. இரண்டாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஏப்.29-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜக தலைவர்கள் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.