

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு 2-வது வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து பிஜு ஜனதா தளம் கூறியுள்ள குற்றச்சாட்டை தலைமை தேர்தல் அதிகாரி விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் கடந்த மார்ச் 16-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக எம்எல்ஏ.க்கள் உபசானா மொஹபத்ரா மற்றும் பூர்ண சந்திர சேதி ஆகியோர் வாக்களித்தபின் அவர்களுக்கு 2-வது முறையாக வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது. இது குறித்து பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு பிஜு ஜனதா தளம் எம்.பி சஸ்மித் பத்ரா கடிதம் அனுப்பினார். இதையடுத்து 2-வது வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக பிஜேடி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விரைவான நடவடிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிஜு ஜனதா தளம் பாரட்டியுள்ளது.