"எஸ்ஐஆர் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை" - காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

"எஸ்ஐஆர் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை" - காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி
Updated on
1 min read

புது டெல்லி: எஸ்ஐஆர் பணிகளை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து பல எதிர்க்கட்சித் தலைவர்களும், மக்களும் இப்போது கேள்விகளை எழுப்புவதால் அந்தப் பணி நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தை துவக்கி வைத்து பேசிய மணீஷ் திவாரி, “முதல் தேர்தல் சீர்திருத்தமாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தேர்வு குறித்த 2023 சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இந்தக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கேபினட் அமைச்சர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்தக் குழுவில் மேலும் இரண்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது எனது பரிந்துரை. அந்த குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையம் மீதான சந்தேகங்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

தேர்தல் ஆணையம் நடுநிலை நடுவராக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருந்தத்தக்க வகையில் இந்த பக்கத்தில் அமர்ந்திருக்கும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் அதன் நடுநிலைமை குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள்.

பல மாநிலங்களில் எஸ்ஐஆர் நடக்கிறது, ஆனால் எஸ்ஐஆர் நடத்த சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை என்று நான் மிகுந்த பொறுப்புடன் சொல்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தில் எஸ்ஐஆருக்கு எந்த ஏற்பாடும் இல்லை.

ஏதாவது ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால், எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து பகிரங்கப்படுத்த வேண்டிய காரணங்களுக்காக அதைத் திருத்திக் கொள்ளலாம் என்பது தேர்தல் ஆணையத்தின் உரிமை. அப்போதுதான் நீங்கள் எஸ்ஐஆர் நடத்த முடியும். பிஹார் முழுவதற்கும் அல்லது முழு கேரளாவுக்கும் எஸ்ஐஆர் செய்ய முடியாது.

எனவே எஸ்ஐஆரை நிறுத்த வேண்டும். எஸ்ஐஆர் தொடர அனுமதிக்கும் எந்த விதியும் சட்டத்தில் இல்லை. முன்பு நடத்தப்பட்ட எஸ்ஐஆர்கள் சட்டவிரோதமானவை என்று நீங்கள் கூறுவீர்கள், அதற்கு எனது பதில் பல தவறுகள் சரியானதாக இருக்காது. இந்திய ஜனநாயகத்தில் இரண்டு பங்குதாரர்கள் உள்ளனர். அவர்கள், வாக்காளர்களாக வாக்களிக்கும் மக்கள் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் ஆவர்” என்றார்

"எஸ்ஐஆர் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை" - காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி
"விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன" - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in