புதுடெல்லி: நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்து ஆதவ் அர்ஜுனா தலைமையிலான தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
நேபாள வெள்ளத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ நிறுவனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்திரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கி உள்ளனர்.
எனினும், வெள்ளத்தில் இருந்து தப்பிய 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களில் கடலூரைச் சேர்ந்த திருமாவளவன் (62) என்பவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட 21 பேரும் தற்போது திரிசூலி பகுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் ர.வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ.சதீஸ் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வரும் அவர்கள், இன்று இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விக்ரம் மிஸ்ரி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் வெளியுறவுத் துறையின் சூழ்நிலை கண்காணிப்பு அறையை தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
முன்னதாக, நேபாள வெள்ளப் பாதிப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகங்கள், அங்குள்ள இந்தியக் குடிமக்களின் நிலை மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களை வழங்கியுள்ளன.
நேபாளத்துக்கு அனுப்பப்படவுள்ள கூடுதல் நிவாரணப் பொருட்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய பிரிவுகள் எங்களுக்குத் தெரிவித்தன. இப்பிரச்சினைக்கு நாங்கள் அதி முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.