

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.
2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் தான் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் வசித்த உமர், லஷ்கர் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மகளை, சஜ்ஜாத் என்ற போலி அடையாளத்துடன் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார்.
இந்தத் திருமண ஆவணங்களை வைத்து போலியாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். ஸ்ரீநகர் போலீஸார் நடத்திய விசாரணை தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.