

பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா
புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர்.
சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவின் இல்லத்துக்கு, நேற்று காலை சுமார் 20 வாகனங்களில் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சண்டிகர் தவிர, டெல்லியில் இரண்டு இடங்களிலும், குருகிராமின் உத்யோக் விஹாரில் உள்ள ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சஞ்சீவ் அரோராவை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள செல்போன்களை கொள்முதல் செய்ததாக போலியான நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது பெறப்பட்டது தொடர்பாக அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அரோரா மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி, அரோரா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.157.12 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘‘மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த நிலையில், மோடி பஞ்சாபில் அமலாக்கத் துறை சோதனைகளைத் தொடங்கியுள்ளார். அமலாக்கத் துறை சோதனைகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. அசோக் மிட்டல் பாஜகவில் சேர்ந்தார். இதே வழியில் அரோராவுக்கு எதிராக சோதனை நடத்தியும் அவர் பாஜகவில் சேரவில்லை. அதனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு சோதனை நடந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.