

சித்தராமையா
பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் முதல்வரை மாற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது மேலிடத் தலைவர்கள், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இன்று பெங்களூரு திரும்பும் முதல்வர் சித்தராமையா, அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சித்தராமையாவின் ராஜினாமா முடிவை அறிவிப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, இன்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான, கடிதத்தை வழங்குவார் என தெரிகிறது.