

பெங்களூரு: பெங்களூருவில் பெய்த ஆலங்கட்டி மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் புதன்கிழமை (ஏப்.29) மாலை பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. இதனால் சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
சிவாஜிநகரில் உள்ள பழமையான பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோர கடைக்காரர்களும், மழைக்கு ஒதுங்கியவர்களும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாந்தி நகரில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆலங்கட்டி மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
சர்ச் தெருவில் உள்ள புக்வார்ம் புத்தக கடைக்குள் மழை நீர் புகுந்ததில் சுமார் 7 ஆயிரம் புத்தகங்கள் நனைந்தன. இதனால் சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த கடையின் நிர்வாகி கிருஷ்ணா தெரிவித்தார். மழை நீரில் நனைந்த புத்தகங்களை வெயிலில் காய வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.