

புதுடெல்லி: சுமார் ரூ.1,000 கோடி சைபர் மோசடி தொடர்பாக 4 சீனர்கள் உள்ளிட்ட 17 பேர் மற்றும் 58 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மையம், இணையவழி முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை செய்திருந்தது.
சிபிஐ விசாரணையில், நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதும், ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு ரூ.152 கோடிக்கு மேல் பணம் சென்றதும் தெரியவந்தது.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானாவில் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.
போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்துகொண்டு சிலர் இந்த மோசடிகளை அரங்கேற்றி வருவது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் 4 சீனர்கள் உள்ளிட்ட 17 பேர் மற்றும் 58 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேரை சிபிஐ கடந்த அக்டோபரில் கைது செய்தது.