

நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா
புதுடெல்லி: கடந்த 2025ம் ஆண்டு யூடியூபில் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சமய் ரெய்னா மற்றும் பிற நகைச்சுவை கலைஞர்கள் 4 பேர், பார்வையற்றவர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை மிகவும் இழிவாக பேசி கேலி செய்தனர்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த 5 பேர் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசா ரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு சம்மன் அனுப்பியதுடன் சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, ஜே.வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் சமய் ரெய்னா மற்றும் அவருடன் தொடர்புடைய விபுல் கோயல், பால் ராஜ் காய், சோனாலி தாக்கர், நிஷாந்த் தன்வார் ஆகிய 5 நகைச்சுவை கலைஞர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை 2 வாரத்தில் செலுத்த தவறினால் அபராதம் உயர்த்தப்படும்.
மன்னிப்பு கோர வேண்டும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கும், சமய் ரெய்னாவின் தற்போதைய செயல்பாடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் நீதிமன்றத்தை ஏமாற்றி விளையாடியுள்ளார். எனவே, ஐந்து நகைச்சுவை கலைஞர்களும் தங்களது செயலுக்குப் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.