

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்வறையில் காப்பி அடித்த மருத்துவ கல்லூரி மாணவரை பேராசிரியர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாணவர் அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள குவெம்பு நகரில் டாக்டர் மலகாரெட்டி ஹோமியோபதி கல்லூரி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மூன்றாம் பருவ ஹோமியோபதி தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் ஷஃபாஸ் கான் என்ற மாணவர் செல்போனை மறைத்து வைத்து காப்பி அடித்ததை கண்காணிப்பு பணியில் இருந்த பேராசிரியர் சிவராஜ் கண்டுபிடித்தார்.
உடனடியாக அவரது விடைத்தாளை வாங்கிய சிவராஜ், தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த ஷஃபாஸ் கான், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை முகத்தில் கடுமையாக தாக்கினார். அங்கிருந்த மற்ற மாணவர்கள் உடனடியாக ஷஃபாஸ் கானை பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.
தேர்வு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியரை தாக்கிய மாணவர் ஷஃபாஸ் கான் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்தடுத்த தேர்வுகளை எழுதவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பேராசிரியர் சிவராஜ் போலீஸில் புகார் அளிக்க முன்வரவில்லை என தெரிகிறது. எனவே கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.