

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.
அப்போது அவர் தனது பேரன் நாரா தேவான்ஷின் பிறந்த நாளையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி. அன்னதான அறக்கட்டளைக்கு ஒருநாள் அன்னதான செலவான ரூ.44 லட்சத்துக்கான காணிக்கையை வழங்கினார். சுவாமியை தரிசித்த பின்னர் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
அதன் பின்னர், சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரி, மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ், மருமகள் பிராம்மனி மற்றும் பேரன் நாரா தேவான்ஷ் ஆகியோருடன் இணைந்து தரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான கூடத்திற்கு சென்றார். அங்கு, பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் பரிமாரியதுடன், பக்தர்களுடன் இணைந்து உண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று, திருமலையில் 12 ஆயிரம் சதுர அடியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன உணவு மற்றும் நீர் பரிசோதன மையத்தை திறந்து வைத்தார். திருமலையில் செயற்கை நுண்ணறிவு கமாண்ட் கண்ட்ரோல் மையத்தை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எதிர் கொள்ளும் சங்கடங்களை முன் கூட்டியே ஏஐ மூலம் கண்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களும் ஒரு அதிநவீன ஆன்மிக மையங்களாக செயல்பட வேண்டும்’’ என்றார்.