

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பதில் அளிக்க மத்திய அரசு இன்று வரை அவகாசம் கேட்டுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை சிஜேபி செய்தி தொடர்பாளர்கள் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். மத்திய அரசுடன் நடைபெற்ற இரண்டாவது உயர்நிலை பேச்சுவார்த்தை இதுவாகும். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அசுதோஷ் ரங்கா பேசியதாவது: தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து அரசிடம் விரிவாக விவாதித்துள்ளோம்.
இக்கோரிக்கைக்கு பதிலளிக்க 25-ம் தேதி (இன்று) பிற்பகல் வரை அரசு அவகாசம் கேட்டுள்ளது. அவரது நீக்கத்தில் தாமதம் ஏற்பட்டால், மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். சிஜேபியின் 2 முக்கிய கோரிக்கைகளுக்கு கொள்கை அளவில் அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் (காவல்துறை வழக்குகள்) எடுக்காமல் இருப்பது போன்றவை குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.