

புதுடெல்லி: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜேஐசிஏ உள்ளிட்ட பன்னாட்டு நிதி அமைப்புகளின் உதவியுடன் நடைபெறுகிறது.
இதுபோல் மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி, எண்ணூர் வரை 133 கி.மீ. தொலைவுக்கு புறநகர் வட்டச் சாலை (சிபிஆர்ஆர்) அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் துறைமுகங்கள் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு திட்டப்பணிளை ஆய்வு செய்ய 4 அதிகாரிகளை கொண்ட மத்திய நிதி அமைச்சக குழு சென்னைக்கு வந்திருந்தது. இவர்களின் 3 நாள் பயணம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இக்குழுவானது இரண்டு திட்டங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பலதரப்பட்ட மக்களிடமும் பேசி விசாரித்துள்ளது. இதில் நிதி அமைச்சக குழுவுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் தமிழ்நாடு இவ்விரண்டு திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது.
பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சக குழு சென்று வந்துள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்கள் குறித்த நேரத்தில் பணியை முடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பணிகளுக்காக கால அவகாசத்தை நீட்டிப்பது அவற்றின் வழக்கமாக உள்ளது. இதுபோல் ஆந்திர மாநிலம் சமீபத்தில் தனது திட்டங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்தது.
தமிழ்நாட்டின் இந்த திட்டங்களை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சக குழு முதன்முறையாக வந்துள்ளது. இக்குழுவின் அறிக்கை அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பணிகள் திருப்தியான முறையில் நடைபெறுவதாக இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.