ஏப்ரலில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு! - ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்னென்ன?

ஏப்ரலில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு! - ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்னென்ன?
Updated on
3 min read

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த ஆண்டு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இது, சில மாநிலங்களில் முன்னதாகவே துவங்க உள்ளது.

இதன் முதல் கட்டத்தில் வீடுகள், அவற்றில் வசிப்பவர்கள், வீடுகளில் உள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை கணக்கெடுக்கப்படும். இது, 'வீட்டுப் பட்டியல் தயாரிக்கும் கட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் வீடுகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இரண்டாவது கட்டம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திலேயே நடத்தப்படும்.

இதில் சாதிவாரியான கணக்கெடுப்பும் இடம்பெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் 2027-ம் ஆண்டில் வெளியாகக்கூடும். இந்த தரவுகள், அரசுத் திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு முதல் இந்தியாவின் அரசியல் சூழல் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர், 2023 இல் நாடாளுமன்றத்தில் 'நாரி சக்தி வந்தன்’ எனும் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது.

இச்சட்டம், நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. எனினும், இச்சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் முழுமையாகக் கிடைத்த பின்னரே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அரசு ‘தொகுதி மறுவரையறை’ பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் போது, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் தோற்றமே முழுமையாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வெறும் 74 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை, பெண்களுக்கான ஒதுக்கீடு அமலான பின் நாடாளுமன்றத்தில் 150-ஐ தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்புகள் உள்ளன. இது நிழ்ந்தால், ஒரு அரசியல் திருப்பமும் ஏற்பட உள்ளது.

2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டால், நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்று தென் இந்திய மாநில அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. இதற்கு, அம் மாநிலங்களின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் இருந்து அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதும் காரணம் எனக் கூறப்படுகிறது.

வட இந்திய மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகையை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறியதே, அதன் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம். இந்த மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, நாடாளுமன்றத்தில் வட மாநிலத்தவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அதே வேளையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடும் என்று தென் மாநிலங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு 2027 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிற்குப் பதிலாக 1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன. இதன் மீது, மத்திய அரசு இது குறித்து இதுவரை எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த 1976-ஆம் ஆண்டில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொகுதி மறுவரையறைக்கு 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. 2001-ஆம் ஆண்டிலும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொகுதி மறுவரையறைக்கு 1971-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையாக அமைந்தது. இந்த காலக்கெடு இந்த ஆண்டோடு முடிவடைகிறது.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான விவரங்களும் கணக்கெடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாக இது இருந்தது. ஜூன் 16, 2025 இல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது.

இந்த கணக்கெடுப்பில் சாதி வாரியான விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பாக எதையும் குறிப்பிடவில்லை. இது, அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் விட்டுவிடுமோ என்ற சந்தேகங்களை எழுப்பியது. இருப்பினும், தற்போதைய சூழல் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

இதற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் ஆகியோரின் விவரங்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டன. அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, 2010-ம் ஆண்டில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது.

இது, சமூக நீதி அரசியலைப் பின்பற்றும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் காரணமாக இருந்தது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் படிவத்தில் சாதி விவரங்களைக் குறிப்பிடுவதற்கான தனிப் பிரிவு சேர்க்கப்படவில்லை. அதற்கு மாற்றாக, சாதி வாரியான சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பை அரசு நடத்தியது.

ஆனால், அக்கணக்கெடுப்பின் அறிக்கை இதுவரையும் வெளியிடப்படவில்லை. இந்த முறை சாதி வாரியான விவரங்களும் கணக்கெடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது இதைத் தொடர்ந்து, சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட்டுள்ளன.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு என்பதும் வெளியாக உள்ளது. இக்கணக்கெடுப்பு அரசுக்கே அதிக அளவில் பயனளிக்கக்கூடியது. எஸ்சி, எஸ்டிக்களுக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போலவே, ஒபிசிக்கும் கூடுதல் நலத்திட்டங்களையும், அதிக இட ஒதுக்கீடு கோரிக்கையும் எழும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 2019 இல் 103-வது அரசியலமைப்புத் திருத்தம் ஒண்டு வரப்பட்டது. இதன் வாயிலாக, பொதுப் பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்குக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியது. இந்த 10 சதவீத எண்ணிக்கை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை அறிய அரசு எவ்விதக் கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.

சமீப ஆண்டுகளில், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடப்பெயர்ச்சி அதிகரித்துள்ளது. இது நகர்ப்புறக் கட்டமைப்புகளின் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி, நகரப் பகுதிகளில் ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், வீடுகளின் எண்ணிக்கை, அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, அந்த வீடுகளின் நிலை மற்றும் பிற தகவல்கள் ஆகியவை பதிவு செய்யப்படும்.

இது நகரங்கள் மற்றும் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்த துல்லியமான தரவுகளை வழங்கும். இத்தரவுகள் நலத்திட்ட மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்; இதன் வாயிலாக, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சிறப்பான மேம்பாட்டிற்கான பொருத்தமான திட்டங்களை வகுக்கும் சூழலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரலில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு! - ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்னென்ன?
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in