

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றதையடுத்து, குவாஹாட்டியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநில தலைவர் திலீப் சைக்கியா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.படம்: பிடிஐ
குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இக்கூட்டணி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
அசாமில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு 2016-ம் ஆண்டு பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது சர்வானந்த சோனோவால் முதல்வரானார். 2021-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது, ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வரானார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி அசாமில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, அசாம் கண பரிஷத் மற்றும் போடோ மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) போட்டியிட்டது.
இதுபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம், ஏஜெபி, சிபிஐ (எம்), ஏபிஹெச்எல்சி மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதுதவிர அனைத்து இந்திய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) தனியாக போட்டியிட்டது. இதில் 85.96% வாக்குகள் பதிவானது. 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், அசாமில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியைப் பிடிக்க 64 இடங்கள் தேவைப்படுகின்றன. இதில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 82, போடோலாந்து மக்கள் முன்னணி 10, அசாம் கண பரிஷத் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக (ஹாட்ரிக்) அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி 21 இடங்களிலும் ஏஐயுடிஎப் 2 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அசாமில் ஹாட்ரிக் வெற்றி பெற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் பாஜகவினர் வெற்றி்க் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் சர்மாவும் கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வெற்றிச் சின்னத்தைக் காண்பித்தார்.
அமித் ஷா வாழ்த்து: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், “அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பு. இந்த வெற்றிக்காக கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவின், முதல்வர் சர்மா, மாநில பாஜக தலைவர் திலீப் சைக்கியா மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஹிமந்த வெற்றி: ஜலுக்பரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹிமந்த பிஸ்வா சர்மா மொத்தம் 1,27,151 வாக்குகள் பெற்ற நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோக் 37,717 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
கவுரவ் கோகோய் தோல்வி: மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அசாம் காங்கிரஸ் தலைவருமான கவுரவ் கோகோய், ஜோர்ஹட் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மகனான இவர், ஜோர்ஹட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹிதேந்திர நாத் கோஸ்வாமி 69,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோகோய் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஹிதேந்திர நாத் கோஸ்வாமி 2017 முதல் 2021 வரையிலான காலத்தில் சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 75 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்ற தொகுதிகள் மேலும் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.