

புதுடெல்லி: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பாஜகவின் தேசிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிர்வாகியின் பெயரையும் இறுதி செய்வதில் மிகத் துல்லியமான தேர்வு இருப்பதாகவும் தெரிகிறது. இப்புதிய அணியில் ஆற்றல் மற்றும் அனுபவத்திற்கு சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 சதவீத நிர்வாகிகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் இடம்பெற்றுள்ளனர்.
10 பெண்கள், 18 எம்பிக்களுடன் 6 பேர் 40 வயதிற்கும் குறைவானவர்கள். 15 நிர்வாகிகள் 40 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். முஸ்லிம், ஜெயினில் தலா ஒருவரும், கிறிஸ்தவர்களில் இருவரும் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தராகண்டின் தீரத் சிங் ராவத் மற்றும் திரிபுராவின் பிப்லப் குமார் தேவ் ஆகிய மூன்று மாநில முன்னாள் முதல்வர்களும் உள்ளனர். 2 பேராசிரியர்கள், முனைவர், பட்டதாரி, மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், சார்டட் அக்கவுண்டன்ட் போன்றவர்களும் உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வில் 2027-ல் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள பெரிய மாநிலங்களுக்கு கட்சி முன்னுரிமை அளித்துள்ளது. அதே சமயம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது, 2028-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2029-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு நியமனம் நடைபெற்றிருப்பதை காட்டுகிறது.
தேசியத் தலைவர் நிதின் நவீனின் தேசிய அணியில் உ.பி.க்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உபியின் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசியத் துணைத் தலைவர் முதல் பல்வேறு பிரிவுகள் வரை, மொத்தம் எட்டு நிர்வாகிகள் உ.பி. மாநிலத்திலிருந்து புதிய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மகராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பினும் ஸ்மிருதி இரானியின் அரசியல் உ.பி.யை சுற்றியே உள்ளது. அமேதியில் ராகுலை தோற்கடித்தவர். அசாம், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் கடுமையாகப் பணியாற்றி இருந்தார். இதனால், அவர் தேசிய பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்டு உள்ளார். பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில் சிறியதாக இருந்தாலும், உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து நான்கு நிர்வாகிகள் பட்டியலில் உள்ளனர்.
குஜராத்திலிருந்தும் அதே எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். பஞ்சாபிலிருந்து 2 தலைவர்கள் உள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, அதிக செல்வாக்கு மிக்க மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்குகிறது. இங்கிருந்து மொத்தம் ஆறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானிலிருந்து நான்கு பேரும், சத்தீஸ்கரிலிருந்து இருவருமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.