

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் சசி தரூரின் கோட்டையான திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது மக்களின் தெளிவான ஆணை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. ஆளும் எல்டிஎஃப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியுள்ளது.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பியான சசி தரூரின் கோட்டையாக இருந்து வருகிறது. 2009 முதல் அவர் தொடர்ந்து 4-வது முறையாக அந்த தொகுதியின் எம்.பியாக உள்ளார். இந்தச் சூழலில், தற்போது கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய நிலவரங்களின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே அக்கட்சி சுயேச்சைகளின் உதவியுடன் மாநகராட்சியை கைப்பற்றும். அதே நேரத்தில் எல்டிஎஃப் 29 இடங்களிலும், யுடிஎஃப் 19 இடங்களிலும் வென்றுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வரவேற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்ற யுடிஎஃப்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்சையாகும். கடின உழைப்பு மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த ஒரு முடிவை அடைய உதவியுள்ளன.
திருவனந்தபுரத்தில் பாஜக-வின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் இறுதியில், ஆட்சியமைப்பில் மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வாக்காளர்கள் வெகுமதி அளித்துள்ளனர்.
அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக யுடிஎஃப்-ஆக இருந்தாலும் சரி அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்.
கேரளாவின் மேம்பாட்டிற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2020-ம் ஆண்டு தேர்தலில் எல்டிஎஃப் 52 இடங்களிலும், பாஜக 35 இடங்களிலும், யுடிஎஃப் 10 இடங்களிலும் வென்றிருந்தது. 2015ஆம் ஆண்டு தேர்தலிலும், திருவனந்தபுரத்தில் பாஜக 35 வார்டுகளை வென்றிருந்தது.