

சந்தன் யாதவ், அம்ரின், அப்ரின்
போபால்: மத்திய பிரதேசத்தில் வேலை தேடும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு சகோதரிகள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அப்பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய சேரிப் பகுதியில் வசித்து வந்தவர்கள் அம்ரின் மற்றும் அப்ரின். சகோதரிகளான இவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு இலவச தங்குமிடம் உணவுடன் மாதம் ரூ.10,000 சம்பளம் தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி வேலைக்கு தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், கட்டாய மதமாற்றமும் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, 21 மற்றும் 32 வயதுடைய இரு பெண்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாக் செவானியா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அம்ரின் மற்றும் அப்ரின் மற்றும் அவர்களுக்கு உதவியாளராக செயல்பட்ட சந்தன் யாதவ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிலால், சானு மற்றும் யாசிர் ஆகிய மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சட்டவிரோதமாக கிடைத்த பணத்தின் மூலமாக அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ஏழ்மையில் இருந்த எங்களுக்கு வேலை தருவதாகக் கூறி மெல்ல பார்ட்டி, பப், லாஞ்சுக்கு அழைத்து அங்கு சென்று செல்வந்தர்களுடன் ஒன்றாக இருக்க வற்புறுத்தினர். மது, எம்டி போதைப் பொருட்களை கொடுத்து சுயநினைவற்ற நிலையில் இருந்தபோது நாங்கள் வன்கொடுமைக்கு ஆளானோம்.
இதேபோன்று, சத்தீஸ்கரை சேர்ந்த பெண் கடந்த டிசம்பர் 2025-ல் வேலை நிமித்தமாக அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு அம்ரினின் உறவினர் யாசிர் என்பவரால் வன்கொடுமை செய்யப்பட்டார். மற்றொரு பெண் சந்தன் யாதவ் என்பரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அம்ரின், அப்ரின் ஆகியோர் மிரட்டினர். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
அம்ரின், அப்ரின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் போன்களை ஆய்வு செய்தபோது பல இளம்பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் குஜராத் மற்றும் மும்பை என இரு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் இதில் மிகப்பெரிய நெட்வொர்க் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.