

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள நியூ திப்பசந்திராவை சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 39 வயதான இவர் தனது 10 வயது மகனுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 27ம் தேதி ஒயிட் ஃபீல்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘கடந்த ஜூன் 19-ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது, ‘உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பார்சல் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதை மும்பை காவல்துறை கண்டறிந்துள்ளது. எனவே எந்த நேரத்திலும் உங்களை கைது செய்ய போலீஸார் வரலாம்' என்றார்.
மறுநாள் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னை மும்பை மாநகர காவல் துணை ஆணையர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘‘போதைப் பொருள் வழக்கில் உங்களையும் உங்கள் 10 வயது மகனையும் டிஜிட்டல் கைது செய்ய இருக்கிறோம். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து காப்பாற்றுகிறோம்'' என பேசியுள்ளார்.
இதையடுத்து மோசடி கும்பல் போலீஸாரை போல பேசி, அந்த பெண்ணிடம் ஜூன் 19-ம் முதல் நவம்பர் 27-ம் தேதிவரை ரூ.2.05 கோடி பணத்தை பறித்துள்ளனர்'' என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த ஒயிட் ஃபீல்ட் சைபர் கிரைம் போலீஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66(சி), 66(டி) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவுகள் 319(2), 318(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 22 தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். இதற்காக விக்யான் நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டையும், மாலூரில் உள்ள இரு வீட்டு மனைகளையும் குறைந்த விலைக்கு விற்றுள்ளார். வங்கியில் கடன் வாங்கியும் பணத்தைக் கொடுத்துள்ளார்'' என்றார்.