

புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ, அந்நாட்டு ராணுவத்துக்கு உளவு பார்த்த வழக்கில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலம், ஹிஸாரை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்தாண்டு மே 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோதி மல்ஹோத்ரா பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் 7-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஜோதி மல்ஹோத்ரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
ஜோதி மல்ஹோத்ரா சார்பில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்வேஷ் குமார் யாதவ் கூறும்போது, “கடந்த ஆண்டு மே 16-ம் தேதி கைது செய்யப்பட்ட ஜோதி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். எவ்வித குற்ற வழக்குகளிலும் தொடர்பு இல்லாத அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் கூறும்போது “தேசப் பாதுகாப்பில் சமரசம் என்பதே கிடையாது. மனுதாரர் ஜோதி அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட நபருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். அவர் வழக்கு விசாரணையைச் சந்திக்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.