டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மே 21 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: கட்டணங்களை உயர்த்த கோரிக்கை

டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மே 21 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: கட்டணங்களை உயர்த்த கோரிக்கை
Updated on
1 min read

புது டெல்லி: எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடகை கட்டணங்களை உயர்த்தக் கோரி, டெல்லியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை இந்த வாரத்தில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் லிட்டருக்கு 90 பைசா உயர்த்தப்பட்டது. 4 நாட்கள் இடைவெளியில் நிகழ்ந்த இரண்டாவது விலை உயர்வு இதுவாகும். மேலும், டெல்லியில் பெரும்பாலான டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி-யின் விலையும் உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.2 அதிகரித்து, சிஎன்ஜியின் விலை ரூ.87-ஐ எட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வு காரணமாக டாக்ஸி, ஆட்டோ கட்டணங்களை உயர்த்த, அதன் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு, நேற்று டெல்லி ஆளுநர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் முதல்வர் ரேகா குப்தா ஆகியோருக்குக் கடிதம் எழுதியது. அதில், இப்பிரச்சினையில் தலையிட்டு, உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், டெல்லியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனால் டெல்லிவாசிகள் மேலும் ஒரு நெருக்கடியைச் சந்திக்கவுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் டெல்லியில் உள்ள தினசரி பயணிகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்ளூர் பயணங்களுக்கு டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களையே பெரிதும் சார்ந்திருப்பவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மே 21 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: கட்டணங்களை உயர்த்த கோரிக்கை
"மோடி மக்களை இன்னும் அதிகமாக சுரண்டுவார்" - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in