

சண்டிகர்: சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும் அவரது மனைவியும், எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாந்தேட் குருத்வாராவில் கடந்த வியாழக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது, ‘நிஹாங்’ பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘கிர்பான்’ (சீக்கியர்களின் புனிதவாள்) கொண்டு தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் சுக்பீர் சிங் பாதலின் வலது கையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முதலுதவிக்குப் பின் நாந்தேட் மருத்துவமனையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாதல், அறுவை சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் கன்னா பகுதியில் உள்ள இஸ்ரு கிராமத்தில், கோவா விடுதலைப் போராட்டத் தியாகி கர்னைல் சிங் இஸ்ருவின் நினைவாக அமைக்கப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசியதாவது: “கடந்த 48 மணி நேரம் எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் கடினமாக இருந்தது. இந்த மாநாட்டில் சுக்பீர் தான் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
பஞ்சாபின் அமைதிக்காகவும், செழிப்புக்காகவும் சீக்கியர்களின் புனிதமான தலங்களில் ஒன்றில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் ஒருபோதும் சீக்கியராக இருக்க முடியாது; அவர் ஒரு ‘குரு தோகி’ (குருவுக்குத் துரோகம் செய்தவர்).
இரண்டு ஆண்டுகளில் சுக்பீர் மீது நடத்தப்பட்ட இந்த 2-வது தாக்குதல் பஞ்சாபில் அமைதியைக் குலைப்பதற்காக 2015 முதல் தீட்டப்பட்டு வரும் அரசியல் சதியின் ஒரு பகுதி.
உறுதியை குலைக்க முடியாது
பஞ்சாபில் அமைதியை ஏற்படுத்த அகாலி தளம் முயலும் போதெல்லாம், சிலர் வெறுப்பைப் பரப்பப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சி சுக்பீ்ரின் உறுதியை அசைக்க முடியாது. இப்போது எனக்குப் பதிலாக மக்கள் பணியைச் செய் என்று கூறி அவர் என்னை அனுப்பி வைத்துள்ளார். இதுவே பஞ்சாப் மக்கள் மீது அவர் வைத்துள்ள உண்மையான அன்பு ஆகும். இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசியுள்ளார்.