ரஷ்யாவில்தான் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் தகவல்
ஹைதராபாத்: ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் 4 பேர் மீது சமீபத்தில் தாக்குதல் நடந்தது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் உள்ள 196 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அந்த நாடுகளில் சித்ரவதை, இன ரீதியிலான தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு 350 புகார்களை இந்திய மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவற்றில் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் ரஷ்யாவில் தான் பதிவாகி உள்ளன.
இதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தான் அதிகபட்சமாக இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக தாக்குதல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு 68, 2024ம் ஆண்டு 78, 2025ம் ஆண்டு 201 புகார்கள் பதிவாகி உள்ளன. எனினும், கல்லூரியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இந்திய மாணவர்கள் பலர் புகார் தெரிவிப்பதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
