

அமராவதி: தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தெலங்கானா அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோதாவரி நதி மீது கட்டப்பட்டு வரும் போலவரம் அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் சந்திர பாபு நாயுடு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் போலவரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: போலவரம் அணை கட்டுவது குறித்து தெலங்கானா அரசு, ஆட்சேபம் தெரிவித்து வருவது வருந்தத்தக்கது. கடலில் கலக்கும் நதி நீரை யார் வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இதில் அரசியல் தேவையற்றது.
தெலங்கானா மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கு இன மக்கள் அனைவரும் சமமானவர்களே. மக்களுக்காக அரசியல் செய்தால் நல்லது. ஆனால், அரசியலுக்காக மக்களை அவதியுறச் செய்யக்கூடாது. ஆர்டிஎஸ் பகுதியில் தண்ணீர் பிரச்சினை வந்தபோது மகபூப் நகருக்கு நாங்கள் தண்ணீர் வழங்கினோம்.
கல்வகுர்த்தி, தேவாதுலா அணைகளை நான்தான் தொடங்கி வைத்தேன். சமீபகாலமாக சிலர் பேசுவதைக் கேட்கையில், பல விஷயங்கள் புரியாத புதிராக உள்ளது. தேவாதுலா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், அது போலவரம் அணைக்கு வரும். கீழ்த் தட்டில் உள்ள போலவரத்துக்கு தண்ணீர் வருவது இயற்கை. இதில் என்ன தவறு ? கோதாவரி நதியில் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் உள்ளது.
தேவையான தண்ணீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். உபரி நீரை நாகார்ஜுன சாகர், சைலம் போன்ற அணைகளிலும் நிரப்பிக் கொள்ளுங்கள். கிருஷ்ணா நதிக்கு நீர்வரத்து குறையும்போது, அதன் மேல்பாகத்தில் அணை கட்டினால் நஷ்டம் வரும்.
கிருஷ்ணா டெல்டா பகுதிகளைக் காப்பாற்றி கோதாவரியுடன் கிருஷ்ணா நதி நீரை இணைத்தால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். ஒரு பொய்யை நூறு முறை சொன்னாலும் உண்மையாகாது. கடலில் வீணாக கலக்கும் நீரை, தடுத்து நிறுத்தினால் உங்களுக்குத் தான் (தெலங்கானா) நஷ்டம்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போலவரம் அணையை கண்டுகொள்ளவில்லை. இதனால் 6 ஆண்டு காலம் நாம் நஷ்டம் அடைந்தோம். தற்போது மீண்டும் அப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் போலவரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.