

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற 152 இடங்களில், 110 இடங்களில் பாஜக வெற்றி பெறும். மம்தா பதவியில் இருந்து இறங்குவார் என அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முதல் கட்ட தேர்தலில் 110 இடங்களில் பாஜக வெற்றி பெறும். திரிணமூல் ஆட்சியை மக்கள் நிராகரித்ததை தேர்தல் முடிவுகள் காட்டும். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிமாநிலத்தவரை பாஜக முதல்வராக்கும் என மம்தா பானர்ஜி வதந்தி பரப்புகிறார்.
அடுத்த முதல்வர் மேற்கு வங்கத்தில் பிறந்து, வங்க மொழியில் படித்தவராக இருப்பார். ஆனால், மம்தாவின் நெருங்கிய உறவினராக மட்டும் இருக்க மாட்டார். மம்தா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டும் என மேற்கு வங்க மக்கள் முடிவு செய்து விட்டனர். இங்கு பாஜக ஆட்சி அமைக்கும். மக்கள் இடையே அச்சம் விலகி நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
இங்கு முதல் கட்ட தேர்தலை அமைதியாக நடத்திய மத்திய போலீஸ் படையினருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி. இவ்வாறு அமித் ஷா கூறினார்.