மே. வங்கத்தில் ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’ முடிவுக்கு வரும்: அமித் ஷா உறுதி

மே. வங்கத்தில் ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’ முடிவுக்கு வரும்: அமித் ஷா உறுதி
Updated on
2 min read

மே 4-ஆம் தேதி மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தில் நிலவி வரும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'நில ஜிஹாத்' போன்ற விவகாரங்கள் முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சப்தகிராமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு லவ் ஜிஹாத் மற்றும் நில ஜிஹாத் ஆகிய இரண்டுமே முடிவுக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு மற்றும் அகவிலைப்படி பலன்கள் கிடைக்கும்.

கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000-க்கு பதிலாக ரூ.9,000 வழங்கப்படும். விதவைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக நிர்ணயிக்கப்படும். 

மோடி ஒரு பயங்கரவாதி என்று கார்கே கூறுகிறார். கார்கே சாப், உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பயங்கரவாதத்தை ஒழிக்கத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒருவரை பயங்கரவாதி என்று அழைக்கிறீர்கள். இதற்கான முழு கணக்கையும் பொதுமக்களே தீர்ப்பார்கள்.

பிரதமர் மோடி இந்த நாட்டை பயங்கரவாதம் மற்றும் நக்ஸலிசத்தில் இருந்து விடுவித்துள்ளார். இன்று நான் சொல்கிறேன், ஊடுருவல்காரர்களிடமிருந்து இந்த நாட்டை பாஜக விடுவிக்கும். எல்லை வேலி அமைக்க பி.எஸ்.எஃப்  அமைப்பிற்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மம்தா அதை வழங்கவில்லை. நீங்கள் பாஜக ஆட்சியை அமைத்தால், வேலி அமைப்பதற்காக அந்த நிலம் முழுவதையும் பி.எஸ்.எஃப் அமைப்பிடம் ஒப்படைக்கும் பணியை 45 நாட்களுக்குள் முடிப்போம் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

ஊடுருவல்காரர்கள் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதோடு, ஏழைகளுக்கான வளங்களைச் சுரண்டி, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். மம்தா பானர்ஜி ரூ.10,000 கோடி மதிப்பிலான பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளார். தங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மே 5-ஆம் தேதி பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது பல்வேறு ஊழல்கள் மூலம் விழுங்கிய பணத்தை அவர் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

மம்தாவின் குண்டர்களுக்கு அஞ்சாதீர்கள். நம்பிக்கையுடன் வாக்களியுங்கள். பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது, மம்தாவின் குண்டர்கள் சிறைக்குப் பின்னால் தள்ளப்படுவார்கள்.

மாலை 7 மணிக்கு மேல் தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மம்தா கூறுகிறார். நீங்கள் மோடியின் கரங்களை வலுப்படுத்தி பாஜக ஆட்சியை அமையுங்கள். நள்ளிரவில் கூட ஒரு சிறுமி தனது ஸ்கூட்டரில் வெளியே செல்ல முடியும், எந்த ஒரு ரவுடிக்கும் நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் கூட இருக்காது.

பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுங்கள், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கும் மாதம் ரூ.3,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேற்கு வங்கம் முழுவதும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்” இவ்வாறு அமித் ஷா பேசினார். 

மே. வங்கத்தில் ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’ முடிவுக்கு வரும்: அமித் ஷா உறுதி
பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ என குறிப்பிட்ட விவகாரம் - கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in