காசியில் ரோப் கார் முதல் நீர்வழிப்பாதை வரை அசத்தல் திட்டங்கள் - வாரணாசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் விவரிப்பு

காசியில் ரோப் கார் முதல் நீர்வழிப்பாதை வரை அசத்தல் திட்டங்கள் - வாரணாசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் விவரிப்பு
Updated on
2 min read

வாரணாசி: காசி நகரின் கட்டமைப்பை மேம்படுத்த சுமார் ரூ.60,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாரணாசி மண்டல ஆணையர் சு.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆன்மிக தலைநகரமாக விளங்கும் காசி, தற்போது நவீன கட்டமைப்புகளுடன் பிரம்மாண்டமான வளர்ச்சியை நோக்கி பயணித்துவருகிறது. குறுகிய சந்துகளும், நெரிசலான சாலைகளும் மட்டுமே காசியின் அடையாளமாக இருந்த நிலை மாறி, இன்று சர்வதேச தரத்திலான சாலைகள், பாலங்கள், நதிவழிக் கப்பல் போக்குவரத்து என பெரும் மாற்றத்தை வாரணாசி சந்தித்துள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெரிவித்த வாரணாசி மண்டல ஆணையரும், தமிழருமான சு.ராஜலிங்கம், "பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி காசி நகரத்தில் அதன் பழமை மாறாமல் உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டோம். இதற்காக ரூ.60,000 கோடியில் ஒரு விரிவான போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) வகுக்கப்பட்டது. இதில் ரூ.40,000 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

வாரணாசியில் முன்பு வெளிவட்டச் சாலைகள் (Ring Road) இல்லை. அதனால், அதிகபட்சம் 7 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வர 3 மணி நேரமாகும். ஆனால், தற்போது புதிய ரிங் ரோடு (Ring Road) மற்றும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் காரணமாக பயண நேரம் 40 நிமிடங்களாக குறைந்துள்ளது. நகரைச் சுற்றிலும் 6 வழிச்சாலையாக ரிங் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நகருக்குள் வரும் அனைத்துச் சாலைகளும் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதேபோல், வாரணாசியில் இருந்து தற்போது 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பயணிகளை கையாளும் விதமாக ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்பு ஒரு நாளைக்கு 10 விமானங்கள் மட்டுமே வந்து சென்ற வாரணாசி விமான நிலையத்தில், தற்போது 52 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம்: கங்கை நதியை வெறும் வழிபாட்டுக்கு மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமநகரில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்காக ஒரு சிறிய துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கொல்கத்தா (ஹல்தியா) வரை சரக்குகளை கொண்டு செல்ல முடியும். கோடைக் காலத்தில் நதியில் நீர் குறையும்போது கப்பல் போக்குவரத்தில் சிக்கல் வராதிருக்க, நதியைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது முழுமையடைந்தால் ஆண்டு முழுவதும் சரக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான கப்பல்களை இயக்க முடியும். மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சொகுசு கப்பல் (Cruise) போக்குவரத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரோப் கார்: வாரணாசியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர முயன்றோம். அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாததால் தற்போது ரூ.800 கோடியில் ‘ரோப் கார்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக ரோப் கார், சுற்றுலா தலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக பொது போக்குவரத்துக்காக காசியில் ரோப் கார் செயல்பட இருக்கிறது. வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோயில் (கோதோலியா) வரை சுமார் 4 கி.மீ தூரத்துக்கு இது அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு செல்ல சாலை வழியில் 1 மணி நேரமாகிறது. ரோப் காரில் வெறும் 15 நிமிடங்களில் சென்றடையலாம். ஐரோப்பிய பாதுகாப்பு தரத்துடன் (CEN Standard) சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்படுகிறது. அடுத்தாண்டு மே மாதத்துக்குள் இது பயன்பாட்டிற்கு வரும். இதற்கு கட்டணமாக ரூ.50 முதல் 100 வரை நிர்ணயிக்க பரிசீலிக்கிறோம். பழமை மாறாத காசியில், வளர்ச்சித் திட்டங்கள் மூலமாக யாத்ரீகர்களின் அனுபவத்தை இனிமையாக மாற்றுவதே இந்த திட்டங்களின் நோக்கமாகும்.

உச்சம் தொடும் கோயில் பொருளாதாரம்: காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம் (Corridor) அமைக்கப்பட்ட பிறகு, நகரின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 5,000 பேர் மட்டுமே கோயிலுக்கு வந்தனர். இப்போது சாதாரண நாட்களில்கூட சராசரியாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பக்தர்கள் வருகின்றனர். ஒரு பக்தர் சராசரியாக ரூ.5,000 செலவு செய்கிறார் என்று வைத்தாலும், அது உள்ளூர் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹோட்டல் தொழில், கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் சிறு வணிகம் போன்றவை மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளன" என தெரிவித்தார்.

காசியில் ரோப் கார் முதல் நீர்வழிப்பாதை வரை அசத்தல் திட்டங்கள் - வாரணாசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் விவரிப்பு
வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவு - மத்திய அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in