

புதுடெல்லி: பத்தாயிரம் கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயாராக உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-6’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அக்னி-6 - வல்லரசு பாதையை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. 10,000+ கிமீ தூரம் பாயும் திறன் மற்றும் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன், அக்னி-6 வரலாறு படைக்கத் தயாராக உள்ளது.
இந்த ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பை எதிரிகள் ஊடுருவ முடியாததாக மாற்றும். அத்துடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் நம்மை நிலைநிறுத்தும். வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பாஜக பதிவேற்றிய ஒரு காணொலியில் கூறியிருப்பதாவது: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சக்தியைக் கொண்டுள்ளன.
இப்போது, இந்தியா அதே வரிசையில் தனது நிலையை வலுப்படுத்தப் போகிறது. அக்னி-6 இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏவுகணையாகும். நீண்ட தூரம் சென்று தாக்கும் திறனுடன், இந்தியாவின் வலிமை பிராந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியிலும் விரிவடையப் போகிறது. இங்குதான் அடுத்த பெரிய மாற்றம் நிகழ்கிறது. ஒரு ஏவுகணை, பல இலக்குகள் - அதுவே எம்ஐஆர்வி தொழில்நுட்பம்.
இது ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யக்கூடியது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே இருந்த இந்த சக்தி, இப்போது இந்தியாவுக்கும் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.எம்ஐஆர்வி தொழில்நுட்பம் என்பது, ஒரே ஒரு ஏவுகணை மூலம் வெவ்வேறு இலக்குகளுக்குப் பல அணு ஆயுதங்களை அனுப்ப அனுமதிக்கும் ஒரு நுட்பமாகும். இது தாக்குதல் திறனை அதிகரிப்பதுடன், எதிரி நாடுகளின் ஏவுகணை எதிர்ப்புத் தற்காப்பு அமைப்புகளை முறியடிக்கவும் உதவுகிறது.