

சிவசேனா கட்சி (உத்தவ்) கொறடா அர்விந்த் சாவந்த்
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்தை 6 பேர் புறக்கணித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப் போவதாக கட்சிக் கொறடா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற சிவசேனா (உத்தவ்) கட்சியின் முக்கியக் கூட்டத்தில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், கட்சியில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காத காரணத்துக்கு விளக்கம் கேட்டு கட்சியின் கொறடா முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்காத 6 பேரையும் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதவுள்ளோம் என்று மக்களவை சிவசேனா கட்சி (உத்தவ்) கொறடா அர்விந்த் சாவந்த் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா கட்சி, கடந்த 2022-ல் இரண்டாக பிளவுபட்டது குறிப்பிடத்தக்கது.