

அபிஷேக் பானர்ஜி
சிலிகுரி: கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றால், இறைவனின் அருளால் நமது பதில் தாக்குதலை கொல்கத்தாவுக்கே கொண்டு செல்வோம். இந்த முறை நமது தாக்குதல் 200 அல்லது 250 கிலோமீட்டர் தூரம் என்ற அளவில் எல்லையோரத்தில் இருக்காது. அவரகளது பிராந்தியத்தில் நுழைந்து, அவர்களது வீட்டிலேயே தாக்குவோம்” என்று பேசியிருந்தார்.
இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அபிஷேக் பானர்ஜி பேசியதாவது: “உள்துறை அமைச்சரை அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பதில் ஏதும் தராமல் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி கூச் பெஹார் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமென மக்களிடம் அவர் பேசி வருகிறார்.
கொல்கத்தாவை தாக்குவோம் என்று மிரட்டலுக்கு மவுனம் காக்கிறார். மற்ற நாடுகள் எல்லாம் எதிரி நாடுகளுக்கு எதிராக ராணுவத்தை போரிட செய்யும். ஆனால், தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் பல்வேறு மத்திய அரசு முகமைகளை பயன்படுத்துகிறார்” என்றார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாகிஸ்தானின் மிரட்டல் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன் என விமர்சித்திருந்தார்.