

ராகவ் சத்தா
புதுடெல்லி: டெல்லி மதுபான கடைகள் ஒதுக்கீட்டு வழக்கில் கடந்த 2024ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அப்போது ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கேஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
கடந்த 2025ம் ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் மற்றும் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி சார்பில் பேச அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உணவு கலப்படம், விமான நிலையங்களில் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அவர் தனது கருத்துகளை முன்வைத்தார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக அவர் எதுவும் பேசவில்லை.
இந்த சூழலில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய துணைத் தலைவராக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.