

புதுடெல்லி: புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் யசோதா மற்றும் கிருஷ்ணா வண்ண ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
சர்வதேச முன்னணி ஏல நிறுவனமான ‘சஃப்ரான் ஆர்ட்' சார்பில் வசந்தகால நேரடி ஏலம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் யசோதா மற்றும் கிருஷ்ணா வண்ண ஓவியம் ரூ.167.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட நவீன இந்தியக் கலையின் மிக உயர்ந்த மதிப்பு மிக்க படைப்பாக இது உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் ரூ.118 கோடிக்கு விற்பனையான எம்.எஃப். ஹுசைனின் 'பெயரிடப்படாத (கிராம் யாத்ரா)' ஓவியத்தின் சாதனையை இந்தப் படைப்பு முறியடித்துள்ளது. ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதிப்பிடப்பட்ட இந்த ஓவியத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் சைரஸ் எஸ்.பூனாவாலா வாங்கியுள்ளார்.
இது குறித்து பூனாவாலா கூறும்போது, “ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்த தேசியச் செல்வம் அவ்வப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும், அதைச் செயல்படுத்த நான் முயற்சிப்பேன்” என்றார்.
1890-களில் வரைந்தது: 1890-களில், ரவிவர்மா கலைப் பயணத்தின் உச்சத்தில் இருந்த போது இந்த ஓவியம் வரையப்பட்டது. யசோதை பசுவிடம் பால் கறப்பதையும், குழந்தை கிருஷ்ணன் பின்னால் இருந்து ஒரு கிண்ணத்தில் பாலை எடுக்க முயற்சிப்பதையும் இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இது ரவி வர்மாவின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.