பிராமண மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை இனி அரசே ஏற்கும் - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

பிராமண மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை இனி அரசே ஏற்கும் - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானாவில் பிராமண சமுதாய மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் கோஹன்பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி செலவில் பிராமண நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலில் இங்குதான் பிராமண சமுதாயத்துக்கான நலக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர். இதனால் பிராமணர் நலத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது.

தெலங்கானாவில் தீப, தூப, நைவேத்திய திட்டம் மேலும் 2,696 கோயில்களுக்கு நீட்டிக்கப்படும். இக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். வேத பண்டிதர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் கவுரவ நிதி ரூ.2,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். இந்த உதவியை பெறுவதற்கான வயது வரம்பு 75-ல் இருந்து 65 ஆக குறைக்கப்படும். வேத பாடசாலை நடத்த ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் படிக்கும் பிராமண மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை இனி அரசே ஏற்கும். பரம்பரை அர்ச்சகர்களின் பிரச்சினைகள் குறித்து, வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in