டெல்லி திஹார் சிறையில் மயங்கி விழுந்த சத்யேந்திர ஜெயின்

டெல்லி திஹார் சிறையில் மயங்கி விழுந்த சத்யேந்திர ஜெயின்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவருமான சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக் கைதியாக டெல்லி திஹார் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிறையில் உள்ள குளியல் அறையில் தலைச்சுற்றல் காரணமாக அவர் நேற்று மயங்கி விழுந்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சத்யேந்திர ஜெயின் முதலில் தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சுவாச பிரச்சினை காரணமாக லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் சிறை குளியல் அறையில் ஜெயின் தடுமாறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இவ்வாறு ஆத் ஆத்மி தெரிவித்தது
சிறை அதிகாரிகள் கூறும்போது, “சத்யேந்திர ஜெயின் பலவீனம் காரணமாக மத்திய சிறை எண் 7-ல் உள்ள மருத்துவமனையின் எம்ஐ அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்குள்ள குளியலறையில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மயங்கி விழுந்தார்.அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவரது உடல்நிலை சீராக இருந்தது. என்றாலும் முதுகு, இடது கால் மற்றும் தோளில் வலி இருப்பதாக ஜெயின் கூறியதால் அவர் தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்றனர்.

சத்யேந்திர ஜெயின் விரைந்து குணமடைந்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “பொதுமக்களுக்கு நல்ல சிகிச்சை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்க இரவும் பகலும் உழைத்தவரை தண்டிக்க ஒரு சர்வாதிகாரி பிடிவாதமாக இருக்கிறார். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், அனைவருக்கும் நீதி வழங்குவார். சத்யேந்திர ஜெயின் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த பாதகமான சூழ்நிலைகளை எதிர்த்து போராட கடவுள் அவருக்கு பலத்தை வழங்கட்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in