பாஜகவின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து டி.ராஜா கருத்து

டி.ராஜா | கோப்புப்படம்
டி.ராஜா | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது" கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். எனவே, பாஜக எந்த மாநிலங்களில் ஆட்சி செய்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

தென் மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தது. இப்போது அந்த ஆட்சி அகற்றப்பட்டுவிட்டது. தென் மாநிலங்கள் எல்லாம் பாஜக அல்லாத அரசுகள் இருக்கின்ற மாநிலங்கள். அதேபோல ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக அதிகாரத்தில் இல்லை. மகராஷ்டிரா மாநில அரசு இப்போது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜவின் ஆட்சி இல்லை. எனவே பாஜக ஒரு பெரும் மாயையைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக தேர்தல் ஒரு நம்பிக்கையை நிச்சயமாக கொடுக்கும். காரணம், ராஜஸ்தான், சதீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வருகிறது. இதில் இரண்டு மாநிலங்களில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. எனவே இனிவர இருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு நம்பிக்கையோடும் எழுச்சியோடும் செயல்படுவதற்கு கர்நாடக மாநில மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மிக பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in