Karnataka Election Results | கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Karnataka Election Results | கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மேல்கோட்டையில் 91 சதவீதமும், குறைந்தபட்சமாக பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியில் 47.36 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 2 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in