மத்தியப் பிரதேசம் | ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து - 15 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து
Updated on
1 min read

கர்கோன்: கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ளது தங்கார்கோன் ஆற்றுப் பாலம். இந்த ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் காவல்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங், இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துவிட்டனர்; 25 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in