இலவச, மானிய விலை மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட்டு மானியம் வழங்கவேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் பயன்பாட்டை துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை மின்வாரியம் வழங்கி வருகிறது. இவை தவிர, குடிசை வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு முழுவதும் இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட்டும், விசைத்தறிக்கு 1000 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மேலும், இலவச மின்சாரம் என்பதால் விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதில்லை. அதனால், இந்தப் பிரிவுகளுக்கான மானியத் தொகையை தோராயமாக மதிப்பீடு செய்து மின்வாரியத்துக்கு, தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டில் அனைத்து விவசாய இணைப்புகளுக்கும் ரூ.6,787 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், குடிசை வீடுகளுக்கு ரூ.300 கோடி என மொத்தம் ரூ.14,430 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. இதில், முறைகேட்டை தடுக்க மீட்டர் பொருத்தாமல் எந்தப் பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது. ஏற்கெனவே மின் இணைப்பு வழங்கி இருந்தால் உடனே மீட்டர் பொருத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு பல முறை அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் மீட்டர் பொருத்தப்பட்டால் இலவச மின்சாரம் ரத்தாகி விடும் என தமிழகத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு இந்த விவகாரத்தில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் இலவச மின்சாரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு அதன்அடிப்படையில் மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in