

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் காப்பரேஷன் வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2018ல் சத்தியபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது அனில் அம்பானியின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தார்.
ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாக சத்யபால் மாலிக் குற்றஞ்சாட்டிய நிலையில் சிபிஐ நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில், சிபிஐ ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், டிரினிட்டி இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனங்களை சேர்த்துள்ளது.
ஒரே மாதத்தில் ரத்து செய்த சத்யபால் மாலிக்: இந்த இன்சூரன்ஸ் திட்டம் 3.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் இந்தத் திட்டத்தை சத்யபால் மாலிக் ரத்து செய்தார். இது குறித்து அப்போது அவர், "இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு ஊழியர்கள் அது மோசடி திட்டம் போல் இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். நானும் கோப்புகளை உற்று கவனித்தபோது எனக்கும் ஒப்பந்தம் தவறாக கொடுக்கப்பட்டது தெரிந்தது. அதனால் ரத்து செய்தேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சிபிஐ சம்மன் குறித்து சத்யபால் மாலிக், "இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் ராஜஸ்தான் செல்கிறேன். அதனால் ஏப்ரல் 27 முதல் 29 வரை ஆஜராக தேதி ஒதுக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் அதிருப்தி.. கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த இருபெரும் நிகழ்வுகளான சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின்போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். 2019 இறுதியில் அவர் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன் பிறகு மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சத்யபால் மாலிக், கடந்த 2022 அக்டோபரில் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சத்யபால் மாலிக், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக்கின் கருத்து குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.