

கேந்திரபாரா: மனைவி சைபர் மோசடியில் பணத்தை இழந்ததால் முத்தலாக் கூறி கணவர் விவகாரத்து பெற்ற சம்பவம் ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் அளித்த புகாரின் பேரில் கேந்திராபாரா காவல் துறை அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
சைபர் மோசடியில் ரூ.1.5 லட்சம் பணம் இழந்ததாகவும் இந்தத் தகவலை தன் கணவரிடம் தெரிவித்ததால் அவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் வரதட்சணை கேட்டும் தன்னை துன்புறுத்தியதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவர் மீது, முஸ்லிம் பெண்களின் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கேந்திராபாரா காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் நடைமுறை மீது தடை விதித்தது. இதன்படி, இந்தியாவில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.